Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 271 – ஏழுபார் எழு (சிவவாக்கியம்)

Posted on பிப்ரவரி 4, 2026

271.ஏழுபார் எழு கடல் இடங்கள் எட்டு வெற்புடன், சூழுவான் கிரி கடந்து சொல்லு மேல் உலகமும் ஆழி மால் விசும்பு கொள் பிரமாண்டரண்ட அவ் அண்டமும் ஊழியான ஒளிக்குளே உதித்துடன் ஒடுக்குமே! புவியில் இருக்கும் ஏழு கண்டங்கள், ஏழு கடல்கள், எட்டு பாலை நிலங்கள் மற்றும் , மேரு மலை எனும் மலை தற்போது கடல் சூழ்ந்து , அப்போது உயரமாக இருந்த வானாலாவிய மலை கடந்து வேறு சொல்லக் கேள்விப் பட்ட மேல் உலகங்களும், ஆழி மால் என்றால் ! மால் என்றால் கரு , ஆழி மால் என்றால் அடர்ந்த கருப்பு. அதாவது அனைத்து கருத்துக்களும் அடர்ந்து கருப்பாகி ஆழிமால் என்றாகும். விசும்பு என்றால் எங்கும் விசும்பல் ஒலியுடன் அண்டம், பேரண்டம் எங்கும் நிறைந்துள்ள அதிர்வைத்தான் வெளி என்கிறோம். ஆழி மால் விசும்பு கொள் என்றால் அடர்ந்த கருவை அதிர்வு நிறைந்த பிரம்மாண்டமான பேர அண்டங்களில் எங்கும் நிறைந்துள்ள அதிர்வு. ஊழியான ஒளிக்குள்ளே என்றால் , ஒளி என்றாலே அடர்ந்த இருட்டும் ஒளிதான், வெளிச்சமும் ஒளிதான். ஒளியின் அளவு மாறுபடும் அவ்வளவுதான். அடர் கருத்துக்குள்ளும், அடர் இருட்டுக்குள்ளும் ஊழியால் மலர்ந்து (உதித்து) மலர்களைப் போல காய்கனி (சூரியன், பூமி, நிலா போன்ற கோடிக்கணக்கான கோள்கள்) தந்து உதிர்ந்து போவதைப் போல ஒளியாகி உடன் அடர் இருட்டாகி கண்களுக்கு காணாமல் ஒன்றும் இல்லாமல் (ஒடுங்கி) ஆகிவிடும் என்கிறார்.
Related Posts