Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 215 – எங்கும் உள்ள ஈசனார் (சிவவாக்கியம்)

Posted on ஜனவரி 29, 2026

215. எங்கும் உள்ள ஈசனார் எம்முடல் புகுந்த பின் பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அனுகிலார். எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்றிரண்டு பேதமோ?. உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே!…. எங்கும் உள்ள ஈசனார் என்றால் இந்த அண்டம் பிரம்மாண்டம் என அனைத்து இயக்கங்களும் சீராக இயங்கி கொண்டு இருக்கக் காரணமான ஈர்த்தல் எனும் சக்தியான ஈசனார் எனும் (magnetic) சக்தி என் உடல் புகுந்த பின் என்கிறார். அப்படி என்றால் அதுவரை அவர் உடலில் அந்த ஈசன் இல்லையா? ஈசன் இருப்பதை அறியாமல் இருப்பதைத்தான் குறிப்பிடுகிறார். நம்மையும் ஆனந்தமாக இயங்க இருக்க வைத்து அடுத்தவர்களையும் ஆனந்தமாக இருக்க தடை ஏற்படுத்தாமல் இயங்கத்தான் இவ்வண்டத்தில் இந்த பூமியில் படைத்தார். ஆனால் அறியாமையில் நாம் படைக்கப் பட்டதை மறந்து படைப்பாளிகளாக நம்மை நினைத்து சாதிக்க துடிக்கிறோம். அதைத்தான் அவர் ஈசன் அவர் உடலில் இருப்பதை அறிந்து கொண்ட பின் அந்த ஈசனை பங்கு கூறு போடுகிறவர்களைப் பார்த்து பரிதாபமாக இவர்கள் வீடு பேறு அடையமாட்டார்கள் என்கிறார். எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என பிரிந்து நின்று சண்டை இடுபவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறார். இருவரும் தவறு. அந்த இரண்டும் இல்லை என்கிறார். அது உங்கள் பேதம் தான். உண்மையில் ஈசன் ஒருவன்தான் . அவன் உங்கள் உள்ளிலும் இருப்பதை அறியாமல் உருவம் கொடுத்துக் கொண்டு வெளியே தேடி அலைகிறீர்கள் என்கிறார்.
Related Posts