Sidhariyal

சிவவாக்கியம் பாடல் 208 – ஆக்கை முப்பது

சிவவாக்கியம்

Posted on ஜனவரி 29, 2026

208. ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடியூடு போய் எக்கருத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரே பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே!!
208. ஆக்கை முப்பது இல்லையே ஆதி காரணத்திலே நாக்கை மூக்கையுள் மடித்து நாதநாடியூடு போய் எக்கருத்தி ரெட்டையும் இறுக்கழுத்த வல்லிரே பார்க்க பார்க்க திக்கெல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே!! இந்தப் பாடலில் நாத நாடி என்று வருவதால் நாம் தச நாடிகள் தெரிந்து கொள்ள வேண்டும். நம் உடல் இயங்க நாடிகள் அவசியம். 72000 நாடிகளில் 10 நாடிகள் முக்கியமானவை. இரு காதுகள். வலது இடது. கேட்டல் இயங்க அத்தி அலம்படை என இரண்டு நாடிகள். சுவாசம் இயங்க மூக்கின் சூரிய கலை சந்திரகலை என இரண்டு நாடிகள். கண்களில் பார்ப்பதை அறிய புருடன் காந்தாரி என இரண்டு நாடிகள். மலம், சலம் கழிக்க குரு, சங்கினி என இரண்டு நாடிகள். வாய் , (உள்ளாக்கு) பேச்சுக்காக சிங்குவை, பத்தாவது நாடியாக எல்லா நாடிகளுக்கும் ஆதாரமான சுழிமுனை என பத்து நாடிகள் நம் உடலை இயக்கி இந்த உலகை புரிந்து கொள்ள காரணமாக உள்ளது. இதில் நாதம் என்பது சத்தம் அதை இயக்கும் நாடியின் ஊடு போய் எக்கருத்துக்கும் இரட்டை கருத்துக்களாக மனம், உள்ளம் எனும் கருத்துக்கள் இல்லாமல் உள்ளத்துக்கு ஆட்பட்டு ஒரே கருத்தாக இந்த உலகை பார்த்தால் பார்க்க பார்க்க அனைத்தும், உயிர்கள் மட்டுமல்ல அனைத்து பொருட்களும் பரப்பிரம்மமாக தெரியும் என்கிறார். நாக்கை மூக்கையுள் மடித்து நாத நாடி என்பதை பலர் தவறாக புரிந்து கொள்வர். இறைவன் எளிமையானவர் . எப்படி நீச்சல் கற்றுக் கொள்ள எந்த புத்தகங்களைப் படித்தாலும் கற்றுக் கொள்ள முடியாது. நீரில் இறங்கி உடல் மிதக்க எப்படி கையை காலை ஆட்ட வேண்டும் என அவரவர்கள் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படி மூச்சுப் பயிற்சியில் நாத நாடியை பிடித்து சுழிமுனையை தேடி அவரவர்கள் தான் பிடிக்க வேண்டும். ஆனால் மிக எளிது. தானாக அமைந்தவர்களும் இருப்பார்கள். அப்படி மூச்சு சரியாக அமைந்து விட்டால் நம் உடல் மூப்பு அடையாது என்கிறார். உள் மூச்சு வெளிமூச்சு என இரட்டை இல்லாமல் ஒன்றாக்கினால் ஆக்கைக்கு மூப்பு இல்லை என்கிறார்.
சிவவாக்கியம்
Related Posts